ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக - திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கணவர் போஸ் தலைமையில் திமுக தரப்பினர் ஒரு தேமுதிக கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட, 10 கவுன்சிலர்களை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வீட்டிற்கு கொண்டு வந்து பாதுகாத்தனர். இதையடுத்து, தேமுதிக கவுன்சிலரை மீட்பதற்காக கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் 6 கார்களில் சென்றனர். இதனால் இருத்தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.