நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதிகளில் 350 பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடல் சார்ந்த இடமும், மீன்கள் அதிகளவில் கிடைக்கும் பகுதி என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ், தானிய மாவு, மரத்தூள் என தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன. மூலிகை எண்ணெயில் வர்ணம் தயாரித்து சிலைகளை அழகுபடுத்தி வருகின்றனர்.
மீன்களுக்கு உணவாகும் 350 விநாயகர் சிலைகள் - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன்களுக்கு உணவாகும் வகையில் விநாயகர் சிலை தயாரிப்பு
ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன்களுக்கு உணவாகும் வகையில் காகிதக் கூழ், மூலிகை எண்ணெயில் தயாரித்த வர்ணங்களை வைத்து விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், 'ராமநாதபுரத்தில் மொத்தமாக 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இதில் 150 சிலைகள் ராமேஸ்வரத்திலும், மற்ற சிலைகள் பரமக்குடியிலும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. சிலை தயாரிப்பின் மூலப்பொருளாக காகித கூழ் இடம்பெற்றுள்ளது.
விநாயகர் சிலைகள் செப்டம்பர் 2 ஆம் தேதி பூஜை செய்யப்பட்டு, பின்னர் 3ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலும் 4ஆம் தேதி தேவிப்பட்டினம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலில் கரைக்கப்படவுள்ளன. இந்த சிலைகள் 3 அடியில் இருந்து 9 அடி வரையில் உள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தேவையான பந்தல், பூஜை பொருட்கள், மின்சாரம் அனைத்தும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்தார்.
TAGGED:
ராமநாதபுரம்