புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரும் அவரது நண்பர்களும் கீரமங்கலத்தில் உள்ள அனைத்து கறிக் கடைகளிலும் தனது ஆடு இருக்கிறதா எனத் தேடியுள்ளனர்.
அப்போது திருடுபோன தனது ஆட்டின் தலையையும், காலையும் ஒரு கடையில் பார்த்துள்ளார். உடனே கறிக் கடைகாரரிடம் சண்டையிட்டு அந்த தலையையும் காலையும் வாங்கிக் கொண்டு நேராக கீரமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு, காணாமல் போன என்னுடைய ஆடுகள் கறிக் கடைக்கு விற்கப்பட்டு கறிக்காக அறுக்கப்பட்டுள்ளது. இது ஆட்டின் தலை. தற்போது என்னுடைய ஆடு திருடு போயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டைத் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரசேகர் முறையிட்டுள்ளார்.