Hong Kong Girl Married Tamil Boy:புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர், முனியாண்டி. இவரது மனைவி உமா. இவர்களது மகன் காத்தமுத்து(எ)மணிகண்டன். இவர் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணி செய்து வந்துள்ளார். பின்னர் கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, காத்தமுத்து(எ)மணிகண்டனுக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த அலார்கான் - செரில் தம்பதியரின் மகள் சென் (எ) செல்சீக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இந்த காதல் குறித்து மணிகண்டனும் அதேபோல் செல்சீயும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாசாரத்தின் முறைப்படியும் மணிகண்டன், செல்சீ திருமணம் நடைபெற வேண்டும் என்று மணிகண்டனின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி செல்சீயின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று(ஜன.26) புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் புடை சூழ மணிகண்டன் - செல்சீ இணையர்களின் திருமணம் முடிவடைந்த நிலையில் பின்னர், விருந்தோம்பல் நிகழ்ச்சி திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணிகண்டனையும் செல்சீயையும் மனதார வாழ்த்தினர்.