தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2019, 10:02 PM IST

ETV Bharat / state

‘சுஜித்தின் மீட்பு பணியில் என்ன நடந்தது?’ - அனுபவங்களைப் பகிர்ந்த வீரமணி

புதுக்கோட்டை: சுஜித்தை மீட்கும் பணியில் தனது கருவியுடன் முயற்சித்து தோல்வியை தழுவிய வீரமணி, அங்கு என்ன நடந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அனுபவங்களை பகிர்ந்த வீரமணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. சுஜித்தின் மீட்பு பணியில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி தான் கண்டுபிடித்த கருவியைக் கொண்டு முயற்சித்தார். பின்னர் அந்த முயற்சியும் தோல்வியை தழுவியது.

புதுக்கோட்டை வீரமணி

இது குறித்து பேசிய வீரமணி, "சுஜித் கீழே விழுந்த தகவல் தெரிந்ததும் ஒரு மணி நேரத்தில் இரும்பைக் கொண்டு L வடிவ ஒரு கருவியை வடிவமைத்து அன்று இரவே நடுக்காட்டுப்பாட்டிக்கு நண்பர்களோடு விரைந்தேன். அங்கு சுகாதார துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று கருவியைப் பற்றி விளக்கமளித்து குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினோம். சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்தோம். ஆனால், அப்போது ஆழ்துளை கிணற்றில் பார்த்த பொழுது குழந்தையின் உருவம் தெரியவில்லை. மணல் மூடி இருப்பதுபோல தெரிந்தது. அதனால் குழந்தையை மேலே தூக்குவது சிரமமாக இருந்தது" என்றார்.

சுஜித்தை மீட்க வீரமணி பயன்படுத்திய கருவி

தொடர்ந்து பேசிய அவர், "என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு என்றால் அதுதான். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை தூக்க முடியதாததை நினைத்து கண்கள் கலங்கி நின்றன. குழந்தையின் மீது மணல் மூடாமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் குழந்தையை தூக்கி இருப்பேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது" என்று கூறினார்.

இதையும் படியுங்க:

பெற்றோரின் அலட்சியம்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details