தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2021, 8:14 AM IST

ETV Bharat / state

புதுக்கோட்டையில் பொதுமக்கள் ஆர்வம்: சுமார் 40,000 பேருக்குத் தடுப்பூசி

புதுக்கோட்டை: மாவட்டத்தில் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து இதுவரை 40 ஆயிரம் பேர் கரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்: ஆட்சியர் உமா மகேஸ்வரி பேட்டி
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்: ஆட்சியர் உமா மகேஸ்வரி பேட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. விதிமுறைகளை மீறியதாக இதுவரை 26 லட்ச ரூபாய் அபராதமாக வசூல்செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு வாகனங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டு பொதுமக்களுக்கு அந்த வாகனங்களில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.

மேலும், நடமாடும் வாகனங்களில் கரோனா தடுப்பு மருந்து எடுத்துச்செல்லப்பட்டு கிராமங்களில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படுகிறது. நேற்று (ஏப். 15) மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் பணியை ஆய்வுசெய்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் இதுவரை 12,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 96 விழுக்காடு குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் படிப்படியாகத் தொற்று அதிகரித்துவருகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மீதமுள்ள படுக்கைகள் காலியாக தயார் நிலையில் உள்ளன.

மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். மாவட்டத்தில் நாள்தோறும் 70 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

மாவட்டத்தில் இதுவரை மூன்று லட்சம் நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1500 பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. இதில் 50 விழுக்காடு காவல் துறையினர், 11 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:தொடங்கியது மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா!

ABOUT THE AUTHOR

...view details