புதுக்கோட்டை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மார்ச் 17) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “பால் தட்டுப்பாட்டிற்கு ஆளும் கட்சியே காரணம். இந்த விஷயத்தில் உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். நீட் தேர்வு ரகசியம் என்று ஒன்றும் இல்லை. நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால் திமுக, நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறி அரசியல் செய்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. தேவை இல்லாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குழப்பாமல், நிலையான அறிவிப்பை திமுக வெளியிட வேண்டும்.
புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு ‘அனிதா’ பெயரை சூட்டியதுதான் நீட் தேர்வு ரகசியமா? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பல கட்சிகள் பின்வாங்கிய நிலையில், தேமுதிக தைரியமாக தேர்தலை எதிர் கொண்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு தேர்தல். இது தேமுதிகவிற்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை வைத்தும், தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனை பல கோடி ரூபாய் கொடுத்துதான் சட்டமன்ற உறுப்பினராக்கி உள்ளனர். திருச்சி சிவா இல்லம் தாக்கப்பட்டது, காவல் நிலையத்தில் திமுகவினர் அராஜகம் செய்தது, திருச்சியில் பட்டப் பகலில் பேராசிரியை தாக்கப்பட்டதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி.