தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2022, 8:55 PM IST

ETV Bharat / state

மோசடி செய்த நிறுவனம் - முதலீட்டாளர்கள் காவல் நிலையத்தில் புகார்

சென்னையில் உள்ள ஹிஜாயு (HIJAU) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், அந்த நிறுவனம் முதலீடை திரும்ப தரவில்லை எனக்கூறி திருமயத்தில் முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை: திருமயம் அருகேவுள்ள கடியாபட்டியைச்சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவரது மகன் அலெக்சாண்டர். இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் ஹிஜாயு (HIJAU) என்ற ‘எண்ணெய் நிறுவனம்’ நடத்தி துபாய், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அதற்கு வட்டியாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு பல்வேறு வித நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நேரடியாக செளந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் அலெக்ஸாண்டர் தலையிடாமல் போர்டு மெம்பர் என்ற அடிப்படையில் முதலில் வந்த 21 முதலீட்டாளர்களை வைத்து மற்ற முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை கொடுத்து வந்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் கூறியபடி வட்டித்தொகை கொடுத்து வந்துள்ளனர். மேலும், இதில் முதலீடு செய்தவர்களிடம் ஆசை வார்த்தைக்கூறி வட்டியாக கொடுத்த தொகையையும் இந்நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

மேலும் முதலீட்டாளர்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களை இதில் முதலீடு செய்ய வைத்தால் அதற்கு தனியாக கமிஷன் தொகையையும் கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்த முதலமைச்சருக்கு கரோனா நிவாரண நிதி வழங்குதல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்களை வைத்து மக்கள் சேவை செய்வதுபோல காட்டுவதற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை தொடங்குதல் உள்ளிட்டப் பல்வேறு கட்ட மக்கள் பணியையும் செய்வது போல் காட்டியுள்ளனர்.

சௌந்தர்ராஜன், அலெக்ஸாண்டர் ஆகியோரின் சொந்த ஊரான கடியாபட்டியில் காமதேனு பாபா திருக்கோயில் என்ற கோயிலையும் முதலீட்டாளர்களின் பணத்திலேயே கட்டி அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களை அந்த கோயிலுக்கும் இவர்கள் அழைத்துச்சென்று நம்பகத்தன்மையை அவர்கள் மனதில் விதைத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை‌ ஏற்பட்டு இந்த நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகளில் 1.25 லட்சம் பேர் ஆறாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஏழு மாத காலத்தில் இதில் முதலீடு செய்தவர்களுக்கு எந்தவித தொகையையும் வழங்காமல் மொத்தமாக லாபத்தொகையை பங்கிட்டு தருகிறோம். அதனால் அதிகப்படியான பங்குகளை செலுத்துங்கள் என்று தெரிவித்து அனைவரையும் நம்ப வைத்து அதிக முதலீட்டை இந்த நிறுவனத்தினர் பெற்ற நிலையில், கடந்த மூன்று மாத காலமாக, பங்கு தொகை தராமல் இந்த நிறுவனத்தினர் நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள்

இறுதியாக கடந்த நவம்பர் 3ஆம் தேதிக்குள் மொத்த தொகையையும் முதலீட்டாளர்களுக்கு செலுத்தி விடுவோம் என்று தெரிவித்த இந்த நிறுவனத்தினர் தற்பொழுது யாரையும் தொடர்பு கொள்ளாமல் தங்களது மொபைல் எண்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டுத் தலைமறைவாகியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சௌந்தர்ராஜன், அவரது மகன் அலெக்சாண்டர் ஆகிய இருவர் மீதும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாங்கள் முதலீடு செய்த பணத்தை எப்படியும் மீட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் சௌந்தரராஜன், அலெக்ஸாண்டர் ஆகியோரால் கட்டப்பட்ட காமதேனு பாபா திருக்கோயிலுக்குச்சென்ற 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் திருமயம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முதலீட்டாளர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களின் தர்ணா போராட்டம் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சென்னை பெண் மருத்துவரிடம் கைவரிசை.. ஜம்தாரா கும்பல் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details