தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் இளையாத்தங்குடி "நகரத்தார்கள்" கல்வெட்டு கண்டுபிடிப்பு - Nagaradars inscription in pudhukottai

புதுக்கோட்டை: திருமயத்தில் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்களின் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-inscription-discovery-in-pudukkottai
-inscription-discovery-in-pudukkottai

By

Published : Jun 15, 2020, 11:58 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் பகுதியில் உள்ள மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் நடப்பட்டிருந்த "திருவோலக்க மண்டபம் குறித்த செய்திகள் அடங்கிய பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி ரெங்கன், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்கல்வெட்டு குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனருமான மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது,"இக்கல்வெட்டில் எழுத்துகள் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளன. இரண்டே கால் அடி உயரமும், ஒன்னே கால் அடி அகலமும் கொண்ட இது, சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்பட்டது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 14 வரிகளுடன் உள்ளது. காலக்குறிப்புகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதனால் எழுத்தமைதியின் அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாக கணிக்க முடிகிறது. அதில் “ சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுதந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக் கழனி வாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்ட "நகரத்தார்களின்" செய்தி குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஒரு பூவுதந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை அப்பகுதியில் காண முடியவில்லை. ஆனாஸ் அதில் குறிப்பிட்ட உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும், வேல்களும் அப்பகுதியில் உள்ளது. திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசகத்தில் கூறப்பட்டுள்ளதுபடி, "இறைவனின் திருவுருவம் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படும் மண்டபத்தை திருச்சபை அல்லது திருவோலக்க மண்டபம் என்று வழங்கப்படிருப்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

இளையாத்தக்குடி, மாத்தூர், வைரவன்கோயில், நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி , இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோயில்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்பது குழுக்களாக அறியப்படும் "நகரத்தார்கள்" பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கி வணிகம் செய்து, அங்கு அவர்கள் தங்களை ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை இக்கல்வெட்டு காட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க:மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details