புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் இன்று(பிப்.4) நடைபெற்றது.
இந்நிகழ்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனில் தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடத்திட அலுவலர்களிடம் தான் அறிவுறுத்தியதன் பேரில் இன்றைய தினம் இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித் தொகை, காதொலிக் கருவி, செயற்கை கால் ஊன்றுகோல், மூன்று சக்கர வாகனங்கள், அடையாள அட்டை என பல்வேறு தேவைகளுக்காக தொடர்புடைய அலுவலகத்திற்கு சென்று அணுகி வந்த நிலையை மாற்றி எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் அத்தனை திட்டங்களையும் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் இங்கு நடைபெறுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 235 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்துள்ளனர். இதில் காதொலிக் கருவி, அடையாள அட்டை, ஊன்றுகோல், மருத்துவச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.