புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளூர் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை சுற்றச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். பின் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளோடு உணவு பரிமாறி மாணவ, மாணவிகளுக்கு உணவை ஊட்டி அவர்களோடு உணவு அருந்தினார். முதல்வரின் காலை உணவுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1327 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது. இதே போன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருமயம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,327 அரசு பள்ளிகளில் படிக்கும் 70 ஆயிரத்து 987 மாணவ மாணவிகளுக்குப் பயன் பெறுகின்றனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது,"இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவேரி தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் சாயப்பட்டறை கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்குச் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தின் மூலமாகவும் கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகளால் மாசடைந்துள்ள காவிரியை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 1,885 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கு மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.