புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கரும்பிரான்கோட்டை பெரியகுளம் ஓடையில், பிறந்து சில தினங்களே ஆன பச்சிளங்குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் புதைத்துள்ளனர்.
இந்நிலையில், குழி ஆழமாகத் தோண்டப்படாததால் குழிக்குள் இருந்த குழந்தையின் உடலை நாய்கள் இழுத்து வெளியே போட்டதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இதனிடையே, அப்பகுதி வழியாக விவசாய பணிக்குச் சென்றவர்கள் உயிரிழந்த குழந்தையின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
ஆலங்குடியில் பச்சிளங்குழந்தையின் உடல் மீட்பு!
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான காவலர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராமையா காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையை யார் காட்டுக்குள் புதைத்தது, குழந்தை இயற்கையாக உயிரிழந்ததா அல்லது உயிருடன் புதைக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.