புதுக்கோட்டை: முத்துக்காடு அடுத்த வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் அரங்கேறி 11 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அது குறித்து நீதிமன்றத்தை நாடியபோது, முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் ஆஜராகாத நிலையில், மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல், இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேங்கைவயல் மக்கள் தொடர்ந்த வழக்கு: அதனை அடுத்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்தவர்களில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதிப்பதாக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும், வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என்கிற உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 8 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதனை அடுத்து, அவர்கள் அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நகலை வழங்கி, அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தைத் தெரிவிக்கலாம் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
பின்னர் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும், டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், ஜூலை 5ஆம் தேதி டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றது.