தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு - மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:47 PM IST

C Vijayabaskar case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது தொடரப்பட்ட வழக்கை, செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தொடுத்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆக.29) விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த மாதம் 26ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார். மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு பதிலாக வழக்கறிஞர்களும் ஆஜராகலாம் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது கடந்த 2016 மற்றும் 2016 - 2021 வரை ஆறு ஆண்டுகளில் 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவல் வெளியானதையடுத்து, அவர் அலுவலகங்கள், இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்கள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து 19 மாதங்கள் ஆன நிலையில், கடந்த மே 22ஆம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அந்த நேரத்தில், இந்த குற்றப்பத்திரிகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஆக.29) விசாரணைக்கு வந்த நிலையில், முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த், வழக்கில் அடுத்த மாதம் 26ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு பதிலாக வழக்கறிஞர்களும் ஆஜராகலாம் என கூறி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சாட்டையை சுழற்றும் நீதிமன்றம், சிக்கலில் அமைச்சர்கள்! நீதிமன்ற வாசலுக்கு படையெடுக்கும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details