விவசாயிடம் கையூட்டுப் பெற்ற உதவி பொறியாளர் கைது - பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே விவசாயியிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற உதவி பொறியாளர் கைதுசெய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி பகுதியில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கிவருகிறது.
இந்த அலுவலகத்தில் பணியாற்றிய தென்னரசு என்ற உதவிபொறியாளரிடம் பிரபாகரன் என்ற விவசாயிக்கு அவரது சொந்த கிராமமான அத்தாணியில் ஆழ்துளை போடுவதற்காக தடையில்லாச் சான்று வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தடையில்லாச் சான்று வேண்டுமென்றால் ஐந்தாயிரம் ரூபாய் கையூட்டு கொடுக்க வேண்டும் என தென்னரசு பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இதற்குப் பிரபாகரனும் சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரபாகரன் உதவி பொறியாளர் தன்னிடம் கையூட்டு கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில் ஏழு பேர் திடீரென கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகத்தில் உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் உதவி பொறியாளருக்குப் பிரபாகரன் வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் பிடிபட்டது. உதவி பொறியாளரைக் கைதுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் தவிர வேறு ஏதேனும் கையூட்டாகப் பெற்றுள்ளாரா எனத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.