புதுக்கோட்டை:வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, திருச்சி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய கடந்த 4 மாத காலங்களாகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த வழக்குத்தொடர்பாக வேங்கைவயல், இறையூர், காவேரி நகர், கீழமுத்துக்காடு, மேலமுத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 147 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது அதில் 11 நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக ரத்த மாதிரி சேகரிக்க நீதிமன்றத்தின் ஆணையை பெற்றுள்ளனர்.
இதனிடையே அந்த 11 நபர்களில் முதல் நபரான காவல் துறையில் பணியாற்றும் வேங்கை வயல்கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் 9ஆவது நபரான கண்ணதாசன் ஆகிய இருவருக்கும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்; அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இருவரும் இன்று காலை 11 மணிக்கு சென்னை தடயவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனைக்காக ஆஜராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டதற்கு முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உருவாக்கியிருந்த வாட்ஸ்அப் குரூப்பில் முரளிராஜா, கண்ணதாசன் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை குரலாகப் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.