தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 3:49 PM IST

ETV Bharat / state

அறந்தாங்கியில் 107 வயது முதியவர் உயிரிழப்பு - திருவிழாவாக கொண்டாடிய கொள்ளு பேரன், பேத்திகள்

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 107 வயது முதியவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது கொள்ளு பேரன், பேத்திகள் திருவிழாவாக கொண்டினர்.

107-year-old man dies
107-year-old man dies

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(107). இவருக்கு காளிமுத்து, ரெத்தினம், நாராயணசாமி, கோவிந்தசாமி என 4 மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவருக்கு 35 பேரன், பேத்திகள், 44 கொள்ளு பேரன் மற்றும் 38 கொள்ளு பேத்திகள் என மொத்தம் 117 குடும்ப வாரிசுகளுடன் வாழ்ந்து வந்த கருப்பையா, 100ஆவது வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள உறவினர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பேரன்கள், கொள்ளு பேரன் பேத்திகளுடன் கொண்டாடி வந்தார்.

மேலும், இந்த ஆண்டு 107ஆவது பிறந்த தினத்தன்று முகக் கவசம் அணிந்து, வெளிநாடு, வெளியூர்களிலிருந்து வரமுடியாத தனது மகன், மகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் காணொளி வழியாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் கருப்பையா. இந்நிலையில் 107 வயதுடைய கருப்பையா, உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (நவம்பர் 19) உயிரிழந்தார். கருப்பையாவின் இறப்பை திருவிழாவாக கொண்டாட எண்ணிய உறவினர்கள், கரகாட்டம், தப்பாட்டம், வைத்து வாண வேடிக்கைகளுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்தனர்.

107-year-old man dies

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், "எங்கள் கருப்பையா தாத்தா 107 வயது வரை உயிர் வாழ்ந்ததற்கு காரணம் அவர் இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய காய்கறி மற்றும் உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார். இதனால், நீண்ட நாட்கள் உயிர் வாழ முடிந்தது. இதுநாள் வரை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லாததே அவருடைய தனிச்சிறப்பு. அவருடைய இழப்பு வேதனையாக இருந்தாலும் 107 வயது வரை வாழ்ந்ததே எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக உள்ளது" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details