பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று அதிகாலை வயதான தம்பதியான பெரியசாமி அவரது மனைவி அறிவழகி வீடு புகுந்து தாக்கி கொடூரமாக இருவரையும் கொலை செய்து, வீட்டிலிருந்த 16 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நகைக்காக நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணி அறிவுறுத்தலின்படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய சந்துரு , மகேஷ், யுவராஜ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் முதலில் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து குற்றவாளிகளை விசாரித்ததில் ஏற்கனவே இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும்,விசாரணையில் தெரிய வந்தது.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்பு, சத்யா,மணிகண்டன் ஆகிய மூவர் என மொத்தம் 6 பேரை இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகை, வெள்ளி கொழுசு, பணம், எல்.இ.டி டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளான சத்யாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஒப்படைத்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக துரிதமாக செயல்பட்ட தனிப்படை குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க:மக்களை தேடி மருத்துவம் - ஒரு கோடி இலக்கு: ஸ்டாலின் உறுதி