கடந்தாண்டு நவம்பர் மாதம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டது. டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடிச் சென்றது கஜா புயல். புயலின் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும், மக்களின் மனதில் இன்னும் ஆறாத ரணமாகவே இருக்கிறது. ஆம் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக பல ஆண்டுகளாக தங்களது பிள்ளைகளை போல வளர்த்து வந்த தென்னைகளை வேரோடு சாய்த்தது இந்த கஜா புயல்.
வாழ்வாதாரத்தை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு, அரசு சார்பிலும் தனியார் அமைப்பு சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனிடைய பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில், தென்னங்கன்றுகள் வளர்த்து அதை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் 30,000 தென்னங்கன்றுகள் வளர்க்கப்பட்டு, சமீபத்தில் 15,000 தென்னங்கன்றுகள் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 15,000 தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு கொடுப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன.