தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 22, 2023, 2:29 PM IST

ETV Bharat / state

பெரம்பலூரில் மான் வேட்டை; சிறுவன் உட்பட 5 பேர் கைது!

பெரம்பலூர் அருகே மான் வேட்டையாடிய சிறுவன் உள்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து உரிமை பெறாத இரண்டு நாட்டு துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மானின் சடலம் மற்றும் ஒரு பயணிகள் வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூரில் மான் வேட்டை
பெரம்பலூரில் மான் வேட்டை

பெரம்பலூரில் மான் வேட்டை

பெரம்பலூர்:கடந்த சில மாதங்களாகப் பட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆடுகள் தொடர்ச்சியாகக் காணாமல் போவதாகப் புகார் வருவதைத் தொடர்ந்து பெரம்பலூர் நகரக் குற்றப்பிரிவு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.22) அதிகாலை பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமப் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டாட்டா மேஜிக் பயணிகள் வேன் ஒன்று வருவதைப் பார்த்த போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் வேட்டையாடப்பட்ட 3 மான்களின் சடலங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த வேனிலிருந்த 5 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் திருச்சி மாவட்டம் எதுமலை வனப்பகுதியில், உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியின் மூலம் மான்களை வேட்டையாடி பெரம்பலூர் பகுதிக்கு அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேட்டை மணி என்கிற மணிகண்டன் (24), ராமச்சந்திரன் (30) வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (33), கார்த்திக் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் 5 நபர்களையும் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள், வேட்டையாடப்பட்ட மூன்று மான்களின் சடலம், அதற்கு அவர்கள் பயன்படுத்திய டாடா மேஜிக் வேன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியவகை புள்ளிமான்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட வனப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த மான்கள் கோடைக்காலங்களில் குடிநீருக்காகவும், இரைதேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பொழுது வேட்டையாடப்படுவதும், சாலைளை கடந்து செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும், கிணறுகளில் தவறி விழுவது, மின்வேலிகளில் சிக்கி உயிரிழப்பதும் என பல்வேறு விதங்களில் அழிந்து வருகின்றன. அந்த வகையில் 3 மான்கள் வேட்டையாடப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் வயதான ஆசிரியரை தாக்கிய பெண் காவலர்கள் - பீகாரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details