தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2019, 6:40 PM IST

ETV Bharat / state

78 லட்ச ரூபாயை பறித்துச்சென்ற கும்பல் கைது: இருவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

பெரம்பலூர்: இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாற்றித் தருவதாகக் கூறி 78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

perambalur police
perambalur police

பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 18ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த ஆறு பேரிடம் 78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான எசனை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அவனது கூட்டாளி கருணாநிதி ஆகியோரை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெரம்பலூர் நகர காவல் நிலையம்

பணத்தைப் பறிகொடுத்தவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன். இவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் முதல்கட்டமாக ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நவம்பர் 24ஆம் தேதி துரைமங்கலம் ரமேஷ், நூத்தப்பூர் கண்ணன், அனுகூர் செந்தில், சுரேஷின் மாமியார் வசந்தா, சுரேஷின் மனைவி சங்கீதா ஆகிய ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தலைமறைவான சுரேஷ் உள்பட நான்கு பேரை மூன்று தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், குற்றவாளியான சுரேஷும் அவனது கூட்டாளி கருணாநிதியும் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான மனோகரன் உள்பட மற்றொரு நபரையும் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் இரு முக்கிய நகரங்களுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சுரேஷ் மீதமுள்ள பணத்தை தலைமறைவாகவுள்ள மனோகரிடம் கொடுத்துள்ளாரா? அல்லது வேறு எங்கேனும் பதுக்கிவைத்துள்ளாரா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ‘சிங்காநல்லூர் குடியிருப்பு வீடுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - குடியிருப்போர் நல சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details