தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.28 லட்சம் கொள்ளை

கடன் பிரச்சினை தீர்ந்து பணமழை கொட்டும் என்று ஆசை வார்த்தை கூறி ஜவுளி உற்பத்தி உரிமையாளரிடம் 28 லட்சம் ரூபாய் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

By

Published : Nov 12, 2022, 9:15 PM IST

பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை பட பாணியில் பேசி 28 லட்சம் கொள்ளை
பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை பட பாணியில் பேசி 28 லட்சம் கொள்ளை

நாமக்கல்:பள்ளிபாளையம் வெடியாரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. ஜவுளி உற்பத்தி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த 8ஆம் தேதி அவரையும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரையும் கட்டிபோட்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்த 28 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி சாய் சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் 5 தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து மல்லூர் சோதனை சாவடியில் காவல் துரையினர் வாகன தணிக்கை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் வந்த நபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்கள் மதுரையைச் சேர்ந்த பெரியமருது, சரவணன், ரஞ்சித், ராஜேஷ், ஜெகதீஷ் திண்டுக்கல் மாவட்டத்தை சோமசுந்தரம், திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 7 பேர் மணி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று காவல் துறையினர் அவர்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது‌.

அதில், ஜவுளி உற்பத்தியாளர் மணி ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்துள்ளார். அப்போது அவரது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ராமராஜன் என்பவர் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சாமியார் ஒருவர் ஜவுளி உற்பத்தியாளர் மணிக்கு அறிமுகமாகி உள்ளார்.

அந்த சாமியார் கடன் பிரச்சினையை பூஜை நடத்தி சரிசெய்வதாகவும் மேற்கொண்டு திருநீறு பூஜை செய்தால் பணமழை கொட்டும் எனவும் மணியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அது மட்டுமின்றி பணமழை பெய்வதும் எலுமிச்சை பழம் தானாக மேலே வருவதும் போன்ற வீடியோக்களை காட்டி அந்த சாமியார் ஜவுளி உற்பத்தியாளர் மணியை நம்ப‌ வைத்துள்ளார்.

அதற்காக கடந்த 8ஆம் தேதி மணியின் வீட்டில் சாமியார் மற்றும் 8 பேருடன் பூஜை நடத்தப்பட்டது. மேலும் திருநீற்றை வைத்து செய்து மணியை வசியம் செய்து மயக்கம் அடைய வைக்க அந்த சாமியார் முயற்சித்துள்ளார். ஆனால் மணி மயக்கமடையாததால் மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாளை தாக்கி கட்டிப்போட்டு ஓட்டுனர் ராமராஜன் மூலம் வீட்டில் இருந்த 28 லட்சம் ரூபாய் பணம் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது‌ விசாரணையில் அம்பலமானது.

மேலும் திருவண்ணாமலை சாமியார் உடன் உள்ள கொள்ளை கும்பல் முதலில் வீட்டில் பூஜைகள் செய்து புதையல் எடுத்து தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி அதன்படி ஏற்கனவே அந்த வீடுகளில் புதையல் வைத்து இவர்களே எடுப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது.

பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை பட பாணியில் பேசி 28 லட்சம் கொள்ளை

இதையடுத்து மணியின் கார் ஓட்டுனர் ராமராஜன் உட்பட 8 பேரிடமும் இருந்து 6 லட்சத்து 2500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தப்பி செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி திருவண்ணாமலை சாமியார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்தும் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல் புதையல் என்றும் யாக பூஜை செய்தால் பண மழை கொட்டும், இரிடியம் உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றும் போலி சாமியார்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details