நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி காளியப்பன் - கலைச்செல்வி. இவர்களது இரண்டாவது மகள் கமலி (25). சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பள்ளிப்படிப்பின்போதே தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார். பின்னர் இளங்கலை படிக்கும்போது பவர் லிஃப்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டு தனி கவனம் செலுத்தினார்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து, மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வாரி குவித்துள்ளார். முதுகலைப் படிப்பை சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு பிரிவில் சேர்ந்து படித்தார்.
வறுமையிலும் சாதனை
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பவர் லிஃப்டிங் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தங்கம் வென்று அசத்தினார். இவரின் வெற்றி இதோடு முடியவில்லை. இவரின் திறமை உலகம் அறிய வேண்டும் என்ற வகையில் உலகளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று நான்காம் இடத்தை பிடித்தார். போட்டிகளில் பங்கேற்ற போதிய பண வசதி இல்லாத போதும் உறவினர்கள், நண்பர்களின் உதவியோடு பங்கேற்று வந்தார். கமலி, 100க்கும் மேற்பட்ட பதக்கங்கள், 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வீடு முழுவதும் குவித்து வைத்துள்ளார்.