தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சிளம் குழந்தைகள் விற்பனை; நான்கு பேரின் காவல் நீட்டிப்பு!

நமக்கல்: ராசிபுரம் அருகே பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sale of baby

By

Published : Aug 15, 2019, 7:52 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

நான்கு பேரின் காவல் நீட்டிப்பு

பின்னர் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டதில், சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூரைச் சேர்ந்த ரேகா, அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தக்குமார் மற்றும் கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் கைதான அமுதா உட்பட ஏழு பேருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி கடந்த 1ஆம் தேதி நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் சேலம் சிறையில் உள்ள செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 4 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை செய்த நீதிபதி லதா, வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் நான்கு பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details