நாமக்கல்: நாமக்கல் அருகே வேட்டாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராஜமாணிக்கம் (61). இவர் உறவினர்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருவதாகத் தெரிகிறது. இவர் தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில், முதியவர் ராஜமாணிக்கம் கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி படுத்த படுக்கையாக இருந்து உள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கடந்த ஜூலை 7ஆம் தேதி வீட்டில் இருந்த ராஜமாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜமாணிக்கத்தை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவருக்கு தக்க சிகிச்சை அளித்து வந்து உள்ளனர்.
மேலும், இவருக்கு இரு கால்களிலும் பிரச்னை இருந்திருப்பதால் அதற்கும் சிகிச்சை அளித்து உள்ளனர். இதை அடுத்து ராஜமாணிக்கத்திற்கு உதவி புரிவதற்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வந்து சாலையின் ஒரமாக போட்டு விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சாலையில் கிடந்த முதியவர் ராஜமாணிக்கத்தை கவனிக்க யாரும் இல்லாததால் சுமார் 5 மணி நேரமாக அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார்.