நாமக்கல்: மோகனூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் என்கின்ற தில்லை குமார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஐந்து வயதில் பெண்குழந்தையும் உள்ளது. தில்லைகுமார் மோகனூரிலும் ஓலப்பாளையத்திலும் அரசின் உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நாளை(ஜன.1-2023) புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் விற்பனையாகும் என நினைத்த தில்லை குமார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் குவித்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று (டிச.31)அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் வீட்டில் இருந்த தில்லை குமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி மற்றும் அண்டை வீட்டை சேர்ந்த பெரியக்காள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் தில்லை குமாரின் வீடு தரை மட்டமானது. மேலும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தில்லை குமாரின் 5 வயது மகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.