தமிழ்நாடு

tamil nadu

பறவை காய்ச்சல் பீதி! அச்சமின்றி கோழி, முட்டை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

By

Published : Jan 7, 2021, 7:55 PM IST

Updated : Jan 8, 2021, 12:59 PM IST

நாமக்கல்: பறவை காய்ச்சல் எதிரொலியால் கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மக்கள் அச்சமின்றி கோழிக்கறி மற்றும் முட்டை உண்ணலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

flu
flu

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சில பண்ணைகளில் வாத்துகள் திடீரென இறந்தன. அவற்றின் மாதிரிகளை சோதித்ததில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. நோய் பரவாமல் தடுக்க ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள வாத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதிகள் தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளியிடங்களிலிருந்து வாத்துகள் மற்றும் தீவனங்களை கொண்டு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதித்து, இதனை மாநிலப் பேரிடராகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் சுமார் ஒன்றரை கோடி முட்டைகள், கறிக்கோழிகள், கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பண்ணைகளின் நுழைவாயிலில் வாகனங்கள் முழுமையாக ரசாயனங்கள் கலந்த கிருமி நாசினியில் நனையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அச்சமின்றி கோழி, முட்டை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தொடர்ந்து நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதோடு, அவை கூண்டுக்குள் வளர்க்கப்படுவதால், பிற பறவைகளுடன் கோழிகளுக்கு தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை என தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். அதோடு பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.

2016, 2020 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட H5N1 வைரஸை விட, வீரியம் குறைவான H5N8 வைரஸ்தான் தற்போது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை என்றும், தமிழக பகுதிகளில் உயிரி தொழில்நுட்ப முறையில் கோழிகள் வளர்க்கப்படுவதால் நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கால்நடை மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். எனவே, மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், முட்டை, கறிக்கோழிகளை நன்கு வேக வைப்பதால் வைரஸ் பரவ வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.

பறவை காய்ச்சல் பீதி! அச்சமின்றி கோழி, முட்டை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

கரோனா அச்சத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மக்களை பறவைக் காய்ச்சல் பீதியடைய வைத்துள்ளதை மறுக்க முடியாது. எனவே, அரசு இதில் கவனமுடன் செயலாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க: கல்லூரி விடுதிக்குள் புகுந்த சிறுத்தை: தேடுதல் வேட்டையில் வனத்துறை!

Last Updated : Jan 8, 2021, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details