நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சட்டையம்புதூர் பகுதியில் சிலர் யானை தந்தம் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் உள்ள சதீஸ்குமார் என்பவரது வீட்டில் திருச்செங்கோடு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.6 கிலோ யானை தந்தத்தை கைப்பற்றி, சதீஸ்குமாரை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சதீஸ்குமாரை நாமக்கல் வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, யானை தந்தம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் திருச்செங்கோடு கொண்டு வரப்பட்டது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தொடர்ந்து விசாராணை மேற்கொண்டு வருகிறார்.