மயிலாடுதுறை: சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றில் ரயில் மற்றும், சாலை மார்க்கத்திற்காக, சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையினை அகல ரயில் பாதையாக மாற்றிய சமயத்தில் அந்த பாலமும் புதிதாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சென்றுள்ளது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது ரயில் பாலத்தை கடந்த நிலையில், படியில் அமர்ந்த அந்த இளைஞரை காணவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் எனக்கருதி, சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் அங்குள்ள ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே போலீசார் தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஆய்வு செய்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.