மயிலாடுதுறை அருகே ஆக்கூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அசோக் (52). இவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் இ.கண்மணியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'ஆக்கூர் தெற்கு தெருவில் உள்ள காளி கோயிலுக்கு பின்புறம் உள்ள நிலத்தை தலைமுறை தலைமுறையாக நாங்கள் அனுபவித்து விவசாயம் செய்து வந்தநிலையில், அந்த நிலத்தைக் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி மீண்டும் அதனை எங்களுக்கே விற்றது. ஆனால், அந்த நிலத்தை எங்களுக்கு கிரயம் செய்துதரப் பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்து விட்டார்கள். இதனால், இந்தப் பிரச்னை குறித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து இயந்திரம் கொண்டு அனுபவத்தில் உள்ள இடத்தில் மரத்தை வெட்டினர்.
இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அந்நிலம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்திரமோகன் தரப்பினர் நிலத்தில் நுழையக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.