மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் சென்றார். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளைச் சந்தித்து அருளாசிப் பெற்றார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், “தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சிக்காகப் பல முயற்சிகள் எடுத்துவருகிறேன். தமிழ்நாட்டில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டு பாஜகவை மதவாத கட்சி என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் பொய்ப் பரப்புரை செய்துவருகின்றன.
இந்தப் பரப்புரை வலுவடைந்தால் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடையேயான நல்லிணக்கம் கெட்டுவிடும். பாஜக சிறுபான்மை அணி சார்பில் மதநல்லிணக்கத்தை முன்னெடுத்துவருகிறோம். அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து நல்லிணக்கக் கருத்துக்கள் குறித்துப் பேசினோம்.
ஒன்றிய அரசை இழிவுப்படுத்தும் திமுக
பாஜக மதம், மொழி, சாதி அரசியலை முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தைப் போதிக்க வேண்டுமென்பதுதான் எங்களது கொள்கை. அனைத்து மக்களின் முன்னேற்றத்தைக் கொண்டுதான் இந்த நாடு வலுப்பெற வேண்டும்.
எந்த மத பாகுபாடும் இல்லை என்று பாஜக கூறிய பிறகும் திமுக அரசு, ஒன்றிய அரசை இழிவுப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடக்கூடியவர்களுக்கு மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது.