வேளாங்கண்ணி பேராலயம் திறப்பு: பக்தர்கள் தரிசனம் - Velankanni Cathedral Opening
நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் திறக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் பக்தர்கள் மாதாவை தரிசனம்செய்து பிரார்த்தித்தனர்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டிருந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் திறக்காதது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் முதல் தரிசனத்திற்காக வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. பின்னர் பேராலயத்திற்கு வருகைதந்த பக்தர்களுக்கு பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம் முன்னிலையில் தெர்மாமீட்டர் வெப்ப பரிசோதனை, கைகளைச் சுத்தம் செய்த பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆலயத்திற்குச் சென்ற பக்தர்கள் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் உள்ளூர் பக்தர்களுக்கு மாலை 5:30, மணி வரை முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பிரார்த்தனைக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் செப்டம்பர் 8ஆம் தேதிவரை வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி ஆலயம் வருவதற்கு தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.