திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான கட்சி கல்வி பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கஜா புயல் அடித்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலும் டெல்டா மாவட்ட மக்கள் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் கூறிய நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. எனவே அரசானது விரைந்து வீடுகளை கட்டி தருவதற்கு முன்வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.