மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி என்ற ஊரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது.
பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோயில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால் “திருவிடைக்கழி” என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயிலைப் பற்றி அருணகிரிநாதரால் "திருப்புகழ்" "கந்தர் அனுபூதி" "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் போற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட "திருவிசைப்பா" “ திருப்பல்லாண்டு” ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்துதான் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.