நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் காலை 6 மணி முதல் விற்பனை நடைபெறுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை மயிலாடுதுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.