தமிழ்நாடு

tamil nadu

நாகூர் கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 6:32 PM IST

Tamil Nadu Governor: நாகூர் கந்தூரி விழாவிற்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தர்காவில் ஆளுநர் தொழுகை வழிபாட்டில் ஈடுப்பட்டார்.

Tamil Nadu Governor
தமிழ்நாடு ஆளுநர்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று(டிச.23) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நாகூர் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நாகூர் வந்த ஆளுநருக்கு, பாரம்பரிய முறைப்படி தர்ஹா மணி மேடையில் ஆளுநர் அமர்ந்திருந்தபடி, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா ஆதினஸ்தர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ஆளுநர் தர்காவிற்கு உள்ளே சென்று பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.

அதன்பின், தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில்,' '467வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எழுதினார். ஆளுநர் வருகையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆளுநர் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் ரம்மி போன்ற தமிழக அரசின் தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறி, நாகூர் கந்தூரி விழாவிற்கு வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கீழ்வேளூர் புறவழிச்சாலை வழியாக வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ, ம.ம.க, த.மு.மு.க, திராவிடர் கழகம், உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி, ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா, விசிக மாவட்டச் செயலாளர் அருட்செல்வன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். நாகூர் வருகை தந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:உறுதி அளித்தபடி ஊதியம் வழங்கவில்லை.. மத்திய அரசின் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details