தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2021, 4:08 PM IST

ETV Bharat / state

பல ஆண்டுகள் கழித்தும் நடவடிக்கை இல்லை - எஸ்பியிடம் புகார்

பல்வேறு காவல் நிலையங்களில் தான் கொடுத்து பல ஆண்டுகளைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத புகார்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமூக செயற்பாட்டாளர் புகார் அளித்துள்ளார்.

கொலை தாக்குதல்
கொலை தாக்குதல்

மயிலாடுதுறை: காவல் உபகோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் உள்ள, தான் கொடுத்த வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளரும், நாம் மக்கள் இயக்கத் தலைவருமான வழக்கறிஞர் சங்கமித்திரன் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அப்புகார் மனுவில், “தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் தன் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு பெரம்பூர் காவல் சரக எல்லையில், கூலிப்படையினர் கொடூர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

வழக்கறிஞர் மீது கொலை தாக்குதல்

பின்னர், கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற கொலை முயற்சி குறித்து, செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதுபோன்று 5 முறைக்கும் மேல் தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, இவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து, சென்னை சிறப்புப் பிரிவுக்கு தெரிவித்து, காவலர் பாதுகாப்பு அளிக்க முகாந்திரம் உள்ளதா என்றறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும் கூறியதாக வழக்கறிஞர் சங்கமித்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடமை தவறிய இரு காவலர்கள் இடமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details