மயிலாடுதுறை:குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் செய்யப்பட்ட வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் 210 மீட்டருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டது. அவசர கதியிலும் தரமற்ற முறையிலும் சாலை அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் தற்போது சாலை அரிசி போல் பெயர்ந்து உருக்குழைந்து வருகிறது. கைகளாலேயே பெயர்த்து எடுக்கக் கூடிய நிலையில் சாலை போடப்பட்டுள்ளது.
இதனைக்கண்டித்து அப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வானமுட்டி பெருமாளிடம் தரமற்ற சாலை அமைத்தவர்களை தண்டிக்கக்கோரி நூதனப்போராட்டம் நடத்தினர். அரிசி போல் பெயர்ந்து வரும் சாலையைக் கூட்டி அள்ளி, பைகளில் நிரப்பி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச்செல்வதுபோல், இருமுடி கட்டி ஜல்லிகளை தலையில் சுமந்து பெருமாள் கோயில் வந்தடைந்தனர்.