மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குள்பட்ட 10ஆவது வார்டில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் நகராட்சி கட்டண கழிப்பிடத்தின் கழிவுநீரை பொதுமக்களுக்கு இடையூறாக சுகாதாரச் சீர்கேடு, நோய்த்தொற்று ஏற்படும் வகையில் 10ஆவது வார்டு தெருக்களில் திறந்துவிடப்படுகிறது.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று (மார்ச் 4) நகராட்சி அலுவலகம் முன்பு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முயன்றனர்.