தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 9:23 AM IST

ETV Bharat / state

சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து இளம்பெண் படுகாயம்

நாகப்பட்டினம்: சுனாமி நிரந்தர குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுனாமி குடியுரிப்பு மேற்கூரை பெயர்ந்து விழுதல்

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பகுதி மக்களுக்கு மறுவாழ்வுக்காக தமிழ்நாடு அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் நிரந்தர குடியிருப்புகளைக் கட்டி கொடுத்தனர். அதில் ஒருபகுதியான நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்த மக்களுக்கு, புதிய நம்பியார் நகரில் 892 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதிலிருந்து தரம் குறைவாக உள்ளதென மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்துவந்துள்ளதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள், மழைக்காலங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது வீட்டின் மேல் தளத்தின் கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைவதால் குடியிருக்க அச்சப்பட்டு ஏராளமானோர் காலி செய்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேற்கூரை பெயர்ந்து விழுந்து இளம்பெண் படுகாயம்

இந்நிலையில், புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பில் உணவு சமைத்துக் கொண்டிருந்த தேவி என்ற இளம்பெண் மீது மேற்கூரையிலிருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, தேவி ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், விபத்துகள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான வீடுகளைச் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க : குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details