நாகப்பட்டினத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறை கோட்டத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் கடந்த வாரம் அடைக்கப்பட்டன.
ஏற்கனவே மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகாலமாக மக்கள் போராடிவரும் நிலையில், மருத்துவக் கல்லூரியை நாகையில் அமைக்காமல் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை கோட்ட பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மிகவும் பின்தங்கிய மக்களுக்கு மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான மயிலாடுதுறை வருவாய் மண்டலத்திலுள்ள நிடூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க உத்தரவிடக் கோரி திமுகவைச் சேர்ந்த குத்தாலம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.