நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமி, தூய்மை பணியாளரான தனது தாயுடன் மேல்நிலை நீரத்தேக்கத் தொட்டி அறையில் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். இச்சிறுமி அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் கர்ப்பமடைந்த அச்சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் அளித்தனர். மாவட்ட சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் சகோதரி கணவர் வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி பலமுறை தகாத உறவு வைத்திருந்ததும், இதில் சிறுமி கர்ப்படைந்ததைத் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததை தெரிந்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி, மேலும் சிலரும் சிறுமியிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததால், தினேஷ் மற்றும் சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பலரும் சிறுமியிடம் தவறாக நடந்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.