மயிலாடுதுறை நகர் மன்ற தலைவருக்காக காத்திருந்த அரசுப் பள்ளி தேசியக்கொடி, மாணவர்கள்! மயிலாடுதுறை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா காலை 8.05 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றிக் காவல் துறை அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளி கல்லூரிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவுக்காகப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு 7.30 மணிக்கு வரவழைக்கப்பட்டனர். கொடியேற்றுவதற்காக மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் அவர்கள் வருகை புரிவதாக இருந்தது.
இந்நிலையில் காலை 10.40 மணிக்கு மேல் ஆகியும் அவர் வராததால் 3 மணி நேரத்துக்கு மேலாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பள்ளிக்கு 10.50 மணிக்கு வந்த நகர்மன்ற தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இச்சம்பவத்தால் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்றுவதற்கான சரியான நேரத்தை அறிவித்து, அந்த நேரத்தில் அனைத்து இடங்களிலும் கொடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 74th republic day: தருமபுரி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை!