மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி தயாரித்துக் கொண்டிருக்கும்போது, வெடி மருந்துகள் வெடித்ததில் ஏற்பட்ட கோர விபத்தில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் (32), மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் (22), கல்லூரி மாணவர் நிகேஸ் (21) மற்றும் ராகவன் (23) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த மணிவண்ணன் என்பவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும் பக்கிரிசாமி, மாசிலாமணி மற்றும் மாரியப்பன் ஆகிய மூன்று பேர் நாகை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பொறையார் காவல் நிலையத்தில் இந்திய வெடிபொருள் சட்டம் (Indian explosive act) 286, 337, 304, 9 (B) (1) (a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வெடி மருந்து கிடங்கின் உரிமையாளர் மோகனை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட வெடி மருந்து கிடங்கில் நேற்று (அக்.5) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் அசம்பாவிதம் நடைபெற்றதாக செவிவழி செய்தியாகக் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர்.