தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் காவலாளியை கொலை செய்தவரை 'தீரன்' பட பாணியில் கைது செய்த போலீசார்! - கொலையாளி கோவிந்தராஜ் இரவு காவலாளியை கொன்று விட்டு தப்பி ஓட்டம்

மயிலாடுதுறை அருகே கடந்த ஆண்டு கோயிலில் உண்டியலை உடைத்து திருடியவரை தடுத்த இரவு காவலாளியை கொலை செய்த வழக்கில், தீரன் படபாணியில் காவல் துறையினர் விசாரணை செய்து கைது செய்தனர்.

கோயில் உண்டியலை உடைத்து இரவு காவலாளியை கொலை செய்தவர் கைது!
கோயில் உண்டியலை உடைத்து இரவு காவலாளியை கொலை செய்தவர் கைது!

By

Published : May 8, 2022, 3:52 PM IST

மயிலாடுதுறை: பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கி இரவுநேர காவலராக பணியாற்றிவந்த செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த சாமிநாதன்(55) என்பவரை, கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி கோயிலில் சுவர் ஏறி குதித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியிருந்தார். பின்னர் அவர் கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்தபோது உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் தப்பி ஓடினார்.

படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சாமிநாதன் மே மாதம் 14ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவந்தனர். 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி பிடிபடாததால் குற்றவாளி போட்டோவை காவல் துறையினர் வெளியிட்டு, குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தனர்.

கோயில் உண்டியலை உடைத்து இரவு காவலாளியை கொலை செய்தவர் கைது!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு சிறை சென்று விடுதலையானவர்கள் குறித்தும், சிறைதண்டனையில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் செல்வம், காவல் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், சேதுபதி, மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 18 சிறைகள் மற்றும் காவல் நிலையங்களில் "தீரன் படம் பாணியில்" விசாரணை மேற்கொண்டதில் வடூவூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதியில் உண்டியல் திருட்டில் சிறைசென்ற தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மருதகுடியை சேர்ந்த கோவிந்தராஜ்(42) என்பதைக் கண்டறிந்தனர்.

குற்றவாளியைத்தேடிவந்த நிலையில், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை சிசிடிவி பதிவின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் காசிவிஸ்வநாதர் கோயில் காவலாளி சாமிநாதனை கொலை செய்த குற்றவாளி என்று தெரியவந்தது.

குற்றத்தை ஒப்புகொண்ட கோவிந்தராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்டு நாளை மறுநாளுடன் ஓர் ஆண்டு ஆக உள்ள‌நிலையில் தற்போது குற்றவாளி கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவலாளியைத் தாக்கி கோயிலில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details