ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகு கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் மாகா அபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! - Maha abhishekam in Naganathaswamy temple

Rahu Ketu Peyarchi 2023: நவ கிரக ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவானுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.

கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் மாகா அபிஷேகம்
கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் மாகா அபிஷேகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 8:54 PM IST

கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் மாகா அபிஷேகம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வாசுகி நாகம் வழிபாடு செய்த சௌந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவ கிரக ஸ்தலங்களில் கேது ஸ்தலமான இங்கு, கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார்.

இந்த இடம், அமுதம் வேண்டி பாற்கடலை கடைவதற்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம், உயிர் பிழைத்து இறைவனை வேண்டி தவம் செய்த இடம் என்று தலபுராணம் தெரிவிக்கின்றது. மூங்கில் காடாக இருந்த இந்த இடத்தில் நாகநாதசுவாமியை வாசுகி நாகம் வழிபாடு செய்த காரணத்தால், இந்தியாவில் கேது பகவானுக்கு என்று இருக்கும் ஒரே கோயிலாக இது விளங்குகின்றது.

இவர் மனக்கோளாறு, தோல் வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர். கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி, அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, தங்களது தோசங்களை நீக்க பரிகாரம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இன்று (அக்.08) மதியம் 3:41 நிமிடங்களுக்கு, துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேது பெயர்ச்சி அடைகிறார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதி துவங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நான்காம் கால யாகசாலை பூஜையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஒரு லட்சம் ஆவர்த்திகளுடன் கூடிய மகாயாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் மங்கள வாத்தியம் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலம் எடுத்துவரப்பட்டது.

பின்னர் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகமும், புனித நீர் கலச அபிஷேகமும் செய்யப்பட்டது. சரியாக 3.41 மணிக்கு சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் கேது பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு கேது பெயர்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கேது பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேது பெயர்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன் தக்கார் ராமு, ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க:அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் மரணம் முதல் அமைச்சர்கள் ஆய்வு வரை முழுத் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details