மயிலாடுதுறை அருகே சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டுத்திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்த கோயிலின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காவேரி ஆற்று கரையிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. அதனையடுத்து இன்று (ஜூலை 06) வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பக்தர்கள் கோயிலுக்கு எடுத்துவந்து வைத்தனர்.
ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா பின்னர் கோயிலிலிருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோயில் முக்கிய வீதிகளின் வழியாக மேல தாலங்கள் முழங்க திருநகரி ஆற்றின் கரைக்கு சென்றனர்.
அங்கு முளைப்பாரி வைத்து பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதையும் படிங்க:இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்