தமிழ்நாடு

tamil nadu

'தன்னம்பிக்கை இருந்தால் கால்களும் கைகளாக மாறும்': +2 பொதுத்தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி!

By

Published : Jun 24, 2022, 5:21 PM IST

மயிலாடுதுறையில் பிறந்த 16 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்டு காப்பகத்தில் வளர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ..

மாணவி லட்சுமி
மாணவி லட்சுமி

மயிலாடுதுறைமாவட்டம், தரங்கம்பாடி சாலை கொத்ததெருவில் ’அன்பகம் அறிவகம்’ என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் கடந்த 2005ஆம் ஆண்டு திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்து 16 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைப் பராமரிக்க முடியாமல், காப்பகத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.

பெற்றோரான காப்பாளர்கள்: இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகியான திருஞானசம்பந்தம், கலாவதி மற்றும் அங்கு பணிபுரிந்த உதவியாளர்களும் தாய், தந்தையராக மாறி அந்த குழந்தைக்கு லெட்சுமி என்று பெயர்‌வைத்து பராமரித்து வளர்த்து வந்துள்ளனர்.

கைகள் இரண்டும் இல்லாத நிலையிலும் மெல்ல மெல்ல தன் இரண்டு கால்களால் வேலைகளை செய்ய பழகிக் கொண்டுள்ளார், லெட்சுமி. இதனைத்தொடர்ந்து கால்களால் கரகத்தை தூக்கி தலையில் வைத்து ஆடுவது, கால்களால் கோலம் வரைவது, கால்களால் ஓவியங்கள் வரைவது, கால்களால் வாசலில் கோலம் போடுவது என்று கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் தன் கால்களால் செய்யத் தொடங்கினார்.

நடனக்கலையில் ஆர்வம்:அதுமட்டுமின்றி கலை மேல் உள்ள ஆர்வம் காரணமாக இவர் கரகாட்டம் ஆடும் பொழுது இரண்டு கால்களைப் பயன்படுத்தி, கரகத்தைத் தலையில் தூக்கி வைப்பது, தாம்பாலத்தட்டின் மீது நின்று கரகம் ஆடுவது, பானையில் மேல் நின்று கரகம் ஆடுவது என்று இரண்டு கைகளால் பேலன்ஸ் செய்து ஆடும் ஆட்டத்தை உடலை சமப்படுத்தி கைகள் இல்லாமலேயே செய்வது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன் காரணமாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா உள்ளிட்டப் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் இவரது கரகாட்டம் கண்டிப்பாக இடம்பெறும்.

'தன்னம்பிக்கை இருந்தால் கால்களும் கைகளாக மாறும்' - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு!

திரும்பி வந்த பெற்றோர், புறக்கணித்த மாணவி: 2017ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற காவிரி புஷ்கரத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அங்கு நடைபெற்ற கலை விழாவில் இவரது கரகாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொலைக்காட்சி மூலம் பார்த்த லெட்சுமியின் பெற்றோர், காப்பகத்திற்கு வந்து மீண்டும் தங்களுடன் வரும்படி லெட்சுமியை அழைத்துள்ளனர். ஆனால் லெட்சுமியோ பிறந்த 16 நாட்களில், தன்னை கைவிட்டு விட்டுச் சென்றவர்களுடன் மீண்டும் செல்ல முடியாது. ”என்னை வளர்த்தவர்களே என்னுடைய பெற்றோர்” என்று உறுதியாகக் கூறி, காப்பகத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார்.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி: இந்நிலையில், இரண்டு கைகளும் இல்லாத போதும் சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் கடுமையாகப் படித்து தற்போது நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதிய மாணவி லெட்சுமி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தொலைதூரக் கல்வி முறையில் கல்லூரி பயின்று கொண்டே, ஓவியக்கலையில் ஆசிரியராக வரவேண்டும் என்பதும், தன்னைப்போல் ஆதரவற்ற கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு காப்பகத்தை அமைக்க வேண்டும் என்பதுமே தனது எதிர்கால லட்சியம் என்று நம்பிக்கையுடன் லெட்சுமி கூறுகிறார். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் கால்களும் கைகள் தான் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், லெட்சுமி.

வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்:பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் லெட்சுமி தேர்ச்சியடைந்ததை அறிந்து வி.கே.சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லெட்சுமியிடம் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சசிகலா, தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும்; விரைவில் நேரில் வந்து மாணவி லெட்சுமியை பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கத்தினர் மாணவி லெட்சுமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கல்வி உதவிகள்:அதனைத்தொடர்ந்து மாணவியின் ஒரு ஆண்டிற்கான கல்லூரி கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து முதற்கட்டமாக முதல் பருவத்துக்கான தொகை ரூ.5000-த்தினை காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினர்.

மாணவி லெட்சுமியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

மேலும் மாணவி லெட்சுமியின் உயர்கல்விக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் காப்பகத்திற்குத் தேவையான உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என்றார்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் சிறப்பு தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details