தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை கனமழை; 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. நீரில் முழ்கிய பயிர்கள்! - புளியந்தோப்பு தெரு நாகை

Nagapattinam rain: நாகப்பட்டினத்தில் பெய்த கனமழையால் பால்பண்ணைச்சேரி, புளியந்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்த நிலையில், கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட தாளடி, சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.

நாகையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நாகையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:06 AM IST

நாகையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

நாகப்பட்டினம்: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாளாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருமருகல், திருக்குவளை, தேவூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் 20 செ.மீ மழை பதிவானது.

இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே 12வது வார்டு பால்பண்ணைச்சேரி, புளியந்தோப்பு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று காலை முதல் மழை விட்டிருந்தாலும், 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் தண்ணீர் வடியாமல் உள்ளது.

மழை நீர் வீடுகளைச் சுற்றியும் தேங்கியுள்ளதால், வீடுகளில் ஈரப்பதம் அதிகரித்து, வீட்டின் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் மங்கலம், வசந்தி என்பவர்களது வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டுக்குள் குடியிருக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பாம்பு, தேள் உள்ளிட்டவை வீட்டுக்குள் புகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் முழுமையாக தண்ணீர் வடியாத காரணத்தால், அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியல் போதிய வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு மழைக்கும் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுவரை இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீரை வடிகால் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளை வந்து பார்வையிட்டு, தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் வைத்து வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்டு 30 நாட்கள் வளர்ந்த தாளடி, சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. குறிப்பாக கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பட்டமங்கலம், கூத்தூர், இலுப்பூர், தேவூர், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த சம்பா, தாளடி வளர்ந்த பயிர்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது.

குளம் போல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பதால், மூழ்கி உள்ள பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் உரிய வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு மழைக்கும் வயல்களில் தண்ணீர் தேங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

இதையும் படிங்க:வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து... 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details