தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை பட்டாசு கிடங்கு விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

mayiladuthurai fire accident: மயிலாடுதுறை அருகே வாணவெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட கோர வெடிவிபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 8:21 PM IST

மயிலாடுதுறையில் வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலி
மயிலாடுதுறையில் வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலி

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம்தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ராமதாஸ் ‌ஃபயர் ஒர்க்ஸ் என்ற வாணவெடி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருமணத்திற்கு தேவையான வாணவெடிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, வாணவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. வழக்கம் போல இன்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது எதிர் பாராத விதமாக ஏற்பட்ட திடீர் விபத்தில், அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இதனால், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இந்த விபத்தில், வெடி கிடங்கில் பணியாற்றிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள், விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.

மேலும், வெடி விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரம் வரை, 18க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி கிடந்தது தெரியவந்தது. வெடி தயாரிக்கும் இடத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு சீட்டினால் ஆன கொட்டகை முற்றிலும் இடிந்து காணப்பட்டது.

தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொறையார் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடி கிடங்கில் பணிபுரிந்து வந்த, கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன், மணிவண்ணன் ஆகிய நான்கு பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து வாணவெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணவெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அறிக்கை மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் துப்பாக்கியுடன் திரிந்த 4 கேரள இளைஞர்கள்.. போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details